Like the Central Government, the Government of Tamil Nadu should reduce the price of petrol and diesel - OPS report!-1908325957
மத்திய அரசு போல தமிழ்நாடு அரசும் பெட்ரோல் டீசல் விலை குறைக்க வேண்டும் - ஓபிஎஸ் அறிக்கை!
உலக அளவில் பணவீக்கம் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழ்நிலையில், விஷம் போல் விலைவாசி உயர்ந்து வருகின்ற இந்தத் தருணத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்களை காக்கும் பொருட்டு, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு எட்டு ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ஆறு ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல், ‘உஜ்வாலா’ திட்டத்தின்கீழ் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு இணைப்புகளுக்கு, ஆண்டுக்கு 12 உருளைகளுக்கு, தலா 200 ரூபாய் மானியம், பிளாஸ்டிக், நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்கு மீதான வரி குறைப்பு, கூடுதல் உர மானியம், சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.
ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக தக்காளி, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலையும் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் தருணத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், பணவீக்கத்தைக் குறைக்கும் வகையிலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பீட்டைக் குறைக்கும் வகையிலும், தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையிலும், குறைந்தபட்சம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்க நடவடிக்கை எடுத்து 'மக்களுக்கு நீதி' வழங்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதுவும் 'திராவிட மாடல்' போலும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும்!
- ஓ பன்னீர்செல்வம்
Comments
Post a Comment